ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகுமா என்பது சூழ்நிலைகளை பொறுத்து முடிவு செய்யப்படும் தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா, தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, மற்றும் மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள், பணபட்டுவாடா செய்வதாக எழுந்த புகார் உள்ளிட்ட பல்வேறு பிரிச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்நிலையில் உள்ளதா என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விக்ரம் பத்ரா, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகுமா என்பது சூழ்நிலைகளை பொறுத்து முடிவு செய்யப்படும் என கூறினார்.
இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பாதுகாப்பு பணிக்காக மேலும் ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.