சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் இன்று பதவியேற்க உள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, டிடிவி. தினகரன் உள்பட 59 பேர் போட்டியிடுகின்றனர். முன்னதாக இந்த தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு சென்ற நடிகர் விஷாலின் மனுவை தேர்தல் அதிகாரி வேலுச்சாமி நிராகரித்தது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து , ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டு வந்த வேலுச்சாமி மாற்றப்பட்டு புதிய அதிகாரியாக பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பிரவின் நாயர் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுசாமி மாற்றப்பட்டதை தாம் வரவேற்பதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் விஷால், தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றப்பட்டிருப்பது ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆர்.கே. நகர் தொகுதியில் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.