ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தங்களின் பதவி நீக்கத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
இரட்டை ஆதாயம் தரும் பதவிகளை வகித்ததாக கூறி 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் தகுதி நீக்க பரிந்துரைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனிடையே குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து விட்டார். இந்நிலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து விட்ட நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் மனுக்களால் பலனில்லை என்பதால் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அவர்களின் வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.