ஆந்திராவில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாகக் கூறி, செம்மர கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் காளகஸ்தி அருகே ஏர்பேடு வனப்பகுதியில் ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரும், வனத்துறையினரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்திக் கடத்திக் கொண்டிருந்த 30க்கும் மேற்பட்டோரை சுற்றிவளைத்த போலீசார், அவர்களை கைது செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது கடத்தல்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசித் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
கடத்தல்காரர்களில் மற்ற அனைவரும் தப்பியோடி விட்டதாகவும், கடத்த தயாராக இருந்த செம்மரங்களை பறிமுதல் செய்ததாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் காளகஸ்தி வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தப்பியோடிய நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.