ஆசிய விளையாட்டுப் போட்டியின் 6-வது நாளின் முடிவில், இந்தியா 6 தங்கம் உட்பட 25 பதக்கங்களை வென்று குவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 6-ஆவது நாளான நேற்று நடைபெற்ற துடுப்புப் படகு போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்திய அணியில் சவர்ன் சிங், போகனால், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் தங்க பதக்கம் வென்றனர். இதில் இந்தோனிஷிய அணி வெள்ளிப் பதக்கமும், தாய்லாந்து அணி வெண்கலப் பதக்கமும் வென்றன.
டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபன்னா-சரண் ஜோடி தங்கம் வென்றது. இறுதி போட்டியில் இந்தியாவின் போபன்னா- சரண் ஜோடி கஜகஸ்தானின் புப்லிக்-டேனிஸ் ஜோடியை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திவந்த இந்திய அணி 6-3, 6-4 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றது. இதே போல், ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரனுக்கு வெண்கல் கிடைத்தது.
மகளிர் கபடிப் போட்டியில் ஈரானுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 24-27 என்ற கணக்கில் தோல்வியடைந்து தங்கத்தை பறிகொடுத்தது. இந்திய அணி தோல்வியையடுத்து வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிச் சுற்றில் ஜப்பான் வீராங்கனை MISAKI KOBAYASHIயை எதிர்த்து விளையாடிய அவர், 3-0 என்ற புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோல் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் கோசல் சவுரவ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதனையடுத்து இந்திய அணி 6 தங்கம், 5 வெள்ளி மற்றும் 14 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 8-ஆவது இடத்தை பிடித்துள்ளது. சீனா 66 தங்கம் உள்ளிட்ட 139 பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தை ஜப்பானும், மூன்றாவது இடத்தை தென்கொரியாவும் பிடித்துள்ளன.