அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கு கிடைக்கும்? ; டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணை….

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் ஆணைய தலைமையகத்தில் இன்று நடைபெறுகிறது.

அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி – தினகரன் அணி ஆகிய இரு தரப்பில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தில் உள்ளது. டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கடந்த 16-ம் தேதி நடந்த விசாரணையின்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அளித்த பிரமாணப் பத்திரங்களில் போலி கையொப்பம் இருப்பதாகவும், இதுதொடர்பான சாட்சியங்களை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தினகரன் தரப்பு கோரியது. ஆனால், தேர்தல் ஆணையம் இதை ஏற்கவில்லை. மேலும், சின்னத்தை முடக்க வேண்டும் என தினகரன் தரப்பு கோரிக்கை விடுத்தது. இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, விசாரணையை 23-ம் தேதி மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையம் தள்ளிவைத்தது. விசாரணையை மாலை 4.30 மணிக்கு தள்ளிவைக்குமாறு தினகரன் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதால், அறிவிக்கப்பட்டபடி, இன்று மாலை 3 மணிக்கு விசாரணை தொடங்குகிறது. அப்போது, தீபா தரப்பினரின் வாதங்களும் கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் நடைபெறவுள்ள விசாரணையில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அணி மற்றும் டிடிவி தினகரன்அணியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் டெல்லியில் குவிந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *