கஜா புயல் தாக்குதலால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மன்னார்குடியில் தொடர்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காடு, திருமக்கோட்டை, தென்பரை, மாங்கோட்டைநத்தம், கன்னியாகுறிச்சி உள்ளிட்ட கிராமத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் விழுந்து சேதம் அடைந்துள்ளன. 10 ஆண்டுகளாக பலன் தந்து கொண்டிருந்த தென்னை மரங்கள் விழுந்துள்ளதால், தங்களின் வாழ்வாதத்தை இழந்து நிற்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மன்னார்குடியிலிருந்து திருமக்கோட்டைக்கு செல்லும் சாலை முழுவதும் மரங்கள் விழுந்தும், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தும் காணப்படுகிறது. மேலும் மன்னார்குடியில் இரண்டு நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் பங்குகள் பூட்டப்பட்டிருந்ததால், பெட்ரோல் டீசல் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று முதல் பெட்ரோல் பங்குகள் செயல்படத் தொடங்கியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பிச் செல்கின்றனர். மிக குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.