ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக சிசிடிவி பதிவு ஏதும் தங்களிடம் இல்லை என்று அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில், பெருங்குடல் புற்றுநோய் தொடர்பான மருத்துவ கருத்தரங்கில் அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி பங்கேற்றார். அப்போது ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதில் இருந்து சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விசாரணை ஆணையத்திடம் அளித்திருப்பதாகத் தெரிவித்தார். முந்தைய சிகிச்சை தொடர்பான விவரங்களும்கூட அளிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
விசாரணை ஆணையம் அழைக்கும்போது சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் பிரதாப் ரெட்டி கூறினார். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக சிசிடிவி பதிவுகள் ஏதேனும் விசாரணை ஆணையத்திடம் அளிக்கப்பட்டதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதியில் சிசிவிடி-கள் ஸ்விட்ச்ஆஃப் செய்யப்பட்டதாகவும், மற்ற நோயாளிகள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்ட பிறகு, குறிப்பிட்ட ஐசியூ-வில் ஜெயலலிதாவுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், எனவே சிகிச்சை அளிக்கப்படும் காட்சிகளை தேவையில்லாமல் பிறரும் காணநேரிடும் என்பதால் அகற்றிவிட்டதாகவும் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணமடைந்த நேரம் குறித்து அரசு மருத்துவர் சுதா சேஷய்யன் கூறிய நேரத்திற்கும், அப்போலோ மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நேரத்திற்கும் உள்ள வேறுபாடு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறிய பிரதாப் ரெட்டி மரண நேரத்தில் எழுந்துள்ள சர்ச்சை பற்றி எதுவும் கூறவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை, ஆணையத்தில் நிலுவையில் உள்ளதால், அதிகம் பேச விரும்பவில்லை எனவும் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.