மதுரை ஆதீனத்துக்குச் செல்ல தடையை எதிர்த்து நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மதுரை ஆதீன மடத்துக்கும், மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கும் செல்வதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜெகதலப் பிரதாபன் என்பவர் தொடுத்த வழக்கில் மதுரை ஆதீன மடத்துக்குள்ளும், ஆதீனத்துக்குச் சொந்தமான மற்றும் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குள்ளும் நித்தியானந்தர் நுழையத் தடை விதிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி நித்தியானந்தா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராமன், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் மனுவைத் திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து மனுவைத் திரும்பப் பெற அனுமதித்த நீதிபதிகள் நித்தியானந்தாவின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *