இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே ஆதரவாளர்கள் சபாநாயகரைத் தாக்க முற்பட்டதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று ராஜபக்சேக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியதும் ராஜபக்சே ஆதரவு உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜெயசூரியாவை நோக்கிச் சென்று அவரைத் தாக்க முற்பட்டனர்.
அப்போது ரணில் விக்ரமசிங்கேயின் ஆதரவாளர்கள் சபாநாயகரைச் சூழ்ந்துகொண்டு பாதுகாப்பாக நின்றனர். இரு பிரிவு உறுப்பினர்களும் மோதிக்கொண்டதால் நாடாளுமன்றம் வன்முறைக் களமாக மாறியது. ராஜபக்சே ஆதரவு உறுப்பினர் திலும் அமுனுகாமா சபாநாயகரின் மைக்கைப் பறிக்க முயன்றபோது அவரை ரணில் விக்ரமசிங்கே ஆதரவாளர்கள் தாக்கினர்.
இதில் காயமடைந்த திலும் அமுனுகாமா மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வன்முறையை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.