மெர்சல் திரைப்படத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்திருக்கும் மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மெர்சல் பட சர்ச்சை தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் மெர்சல் திரைப்படத்தை பார்த்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ படம் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெர்சல் திரைப்படத்தில் சமூகத்திற்கு தேவையான வசனங்கள் இடம் பெற்றிருப்பதாகவும், நடிகர் விஜய்யின் வசனங்களில் உடன்பாடு உள்ளதாகவும் அவர் கூறினார்.
மெர்சல் படத்திற்கு மறு தணிக்கை தேவையில்லை என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மெர்சல் படத்துக்கு தணிக்கை சான்று பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்யக் கூடாது என்றும், விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விமர்சிப்போரை மவுனமாக்கக் கூடாது , கருத்துக்களை தெரிவிக்கும்போது தான் இந்தியா ஒளிரும் என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.