பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திமுக சார்பில் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பேருந்து கட்டணத்தை உயர்த்தி கடந்த வாரம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. இதேபோல் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கடந்த 23,24ம் தேதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திமுக சார்பில் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.