சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா இன்று பரோலில் வெளிவரவிருப்பதாக சசிகலா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
வி.கே. சசிகலா கணவர் நடராசன் உடல்நிலை பாதிப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனை சந்திக்க அவசர பரோல் கேட்டு சசிகலா நேற்று மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், கடுமையான நிபந்தனைகளுடன் சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். பரோலில் வெளிவரும் சசிகலா அரசியல் ரீதியாக கட்சியினர் உட்பட யாரையும் சந்திக்க கூடாது எனவும், அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே தங்க வேண்டும் எனவும் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். இதேபோல், சசிகலாவிற்கு பரோல் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் நேற்று விடுமுறை என்பதால் பரோல் வழங்கப்படவில்லை என்றும் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த இறுதி விசாரணையை இன்று தேர்தல் ஆணையம் நடத்தவுள்ளது. இந்நிலையில் சசிகலா இன்று பரோலில் வெளிவரவிருப்பது அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.