விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி கெயில் திட்டத்தை நிறைவேற்றுமாறு தமிழக அரசை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து கொண்டுவரும் எரிவாயுவை கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, தமிழகத்தின் கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக பெங்களூரு கொண்டு செல்ல கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வயல்களில் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்ததால், தமிழகத்தில் இந்தத் திட்டம் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக, அந்தத் திட்டத்துக்கு தமிழக அரசும் தடை விதித்தது. இந்நிலையில், கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தின்போது, கெயில் திட்டம் தொடர்பாக பிரதமர் விவாதித்துள்ளார். இதையடுத்து, கெயில் திட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளை குழாய் பதிக்கும் இடங்களுக்கே அழைத்துச் சென்று திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.