டெங்கு காய்ச்சலை தடுக்க தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் போர்க்கால அடிப்படையில் தயாரித்துக் கொண்டிருக்கிறது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுகாதாரத்துறையின் அலட்சியத்தால் டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், உயிரிழப்புகள் அதிகரித்து வருவது, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த பொட்டிகுளத்தில், மகாலட்சுமி என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்துள்ள வீராக்கன் கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை பூவிருந்தவல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டெங்கு காய்ச்சலை தடுக்க தடுப்பு ஊசிகள் ஏதும் இல்லை என்றும் டெங்கு காய்ச்சலை தடுக்க தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் போர்க்கால அடிப்படையில் தயாரித்துக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். மேலும், டெங்கு காய்ச்சலுக்கு போதிய வசதிகள் இல்லாத தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டாம் என்றும் தண்ணீரில் வரக்கூடிய கொசுவை அழித்தாலே டெங்குவை முற்றிலும் ஒழிக்கலாம் என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.