சென்னை ஆர்.கே நகரில் வரும் 21ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்தவெளி வாகனத்தில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மதுசூதனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், விஜயபாஸ்கர், தங்கமணி, ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி உதயக்குமார், திண்டுக்கல சீனிவாசன், எம்.பி மைத்ரேயன் உள்ளிட்டோரும் வாக்கு சேகரித்தனர்.
முன்னதாக திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வண்ணாரப்பேட்டையில் சுற்றுவட்டாரப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதனிடையே டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் பிரஷர் குக்கருடன் சென்று டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை, டிடிவி தினகரன் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே. நகரில் தமது ஆதரவாளர்களை காரணமின்றி காவல்துறையினர் கைது செய்வதாக குற்றம்சாட்டினார்.