அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் கட்சியின் தேர்தல் அதிகாரியான முல்லப்பள்ளி ராமச்சந்திரன் 89 வேட்புமனுக்கள் ராகுல் காந்தியை முன் மொழிந்து தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் வேட்புமனுவை தாக்கல் செய்த ஒரே நபராக ராகுல்காந்தி இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அவர் அறிவித்தார். இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி தலைவராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே பட்டாசுகள் வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.