இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு விசாரணையை தேர்தல் ஆணையம் நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க இரண்டு அணிகளாக பிரிந்ததால், கட்சியின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இது தொடர்பான வழக்கில், சின்னம் யாருக்கு என்பது குறித்து அக்டோபர் 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, இரட்டை இலை சின்னத்தை பெற ஈ.பி.எஸ். மற்றும் டிடிவி அணியினர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்கள் மீது தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இறுதி கட்ட விசாரணையில், இருதரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். இதில், தினகரன் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், வழக்கில் குறுக்கு விசாரணை செய்ய கூடுதல் அவகாசம் கேட்டு வாதிட்டார். இதற்கு ஈ.பி.எஸ். அணி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து வழக்கை நவம்பர் -1 ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.