இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களின் தலைவிதியை நிர்ணயித்தவர் புரட்சியாளர் அம்பேத்கர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தேசிய சட்டநாளை முன்னிட்டு, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், உயர்நீதிமன்றங்களில் தாய்மொழி என்பதை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி சார்பில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானி, ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தராமன், மற்றும் சட்ட வல்லுநர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் இம்மாநாட்டில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களின் தலைவிதியை நிர்ணயித்தவர் புரட்சியாளர் அம்பேத்கர் என்று புகழாரம் சூட்டினார். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக இம்மாநாட்டில் பேசிய முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானி, இந்தியா பணக்கார நாடாக மாறி வருவதாகவும், ஆனால் ஏழைகள் அப்படியே இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும் கருப்பு பண விவகாரத்தில் பிரதமர் மோடியை ஆதரித்ததற்கு வெட்கப்படுவதாக அவர் கூறினார்.