கஜா புயல் பாதித்த மாவட்டங்களை வரும் செவ்வாய்க்கிழமை பார்வையிட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடலோர மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
புயல் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க கூடுதலாக அமைச்சர்கள் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இன்றே புயல் பாதித்த மாவட்டங்களுக்கு தான் செல்ல இருந்ததாகவும் கூறினார். ஆனால், சேலத்தில் ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளை முடித்துச் செல்ல கால நேரம் போதாது என்றும், ஆய்வுக்கு ஒரு நாள் முழுவதும் தேவைப்படுவதாகவும் கூறினார். எனவே வரும் செவ்வாய்க்கிழமை பார்வையிடச் செல்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
கிராமப்புறங்களுக்கு சென்று பார்க்கும்போதுதான், நினைத்ததைவிட அதிக புயல் சேதம் இருப்பதாகத் தெரியவந்துள்ளதாகவும், நெற்பயிர், வாழை, கரும்பு உள்ளிட்ட பல பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். நிவாரண முகாம்களில் தங்கியுள்ளோருக்கு உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், மின்வசதியில்லாததால் பலரும் முகாமுக்கு வந்துகொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இயற்கைப் பேரிடர் பாதிப்பை எதிர்கொள்ள மனிதாபிமான அடிப்படையில், கட்சிப்பாகுபாடின்றி உதவிகளைச் செய்ய அனைவரும் முன்வரவேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
புயலால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், முழுவதுமாக சேத மதிப்பீடு கண்டறிந்த பின்பே மத்திய அரசுக்கு அனுப்பி நிவாரணம் பெற முடியும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். போக்குவரத்து இன்று மாலைக்குள் சீரமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.