காங்கிரஸ் ஆட்சியில் தொலைபேசியில் பேசிக் கடன்கொடுக்கச் சொன்னதால் வங்கிகள் சீர்குலைந்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ள மகாசமுந்த் என்னுமிடத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது தொலைபேசி வங்கிச் சேவையால் வங்கிகள் அழிந்துவிடும் எனக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதைக் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் ஆட்சியில் தொலைபேசியில் பேசித் தொழிலதிபர்களுக்குக் கடன்கொடுக்கச் சொன்னதையும், கடன்பெற்றவர்கள் திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டு ஓடியதால் வங்கிகள் சீர்குலைந்ததையும் மோடி சுட்டிக்காட்டினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பத்தாண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தின் மீது எந்த அக்கறையும் காட்டவில்லை எனத் தெரிவித்தார்.
நான்கு தலைமுறையாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தைப் பற்றித் தான் சிந்தித்ததாகவும், மக்கள் நலனைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்றும் மோடி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தினரைத் தவிர வேறுயாரையாவது தலைவராக்க முடியுமா என்றும் மோடி சவால் விடுத்தார்.