இலங்கையில் இருந்த படகுகளை மீட்டு திரும்பிய நாகை மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை வசம் இருந்த படகுகளை மீட்க சென்ற மீனவர் குழு படகுகளுடன் திரும்பிக்கொண்டிருந்தபோது, வழியில் ஒரு படகு பழுதாகி நின்றதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. படகு நின்றதை அடுத்து, பின்னால் வந்த இந்திய கடற்படையினரிடம் மீனவர்கள் நிலைமையை கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த இந்திய கடற்படையினர், மீனவர்களை தாக்கியுள்ளனர். மேலும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளையும் இந்திய கடற்படை வீரர்கள் சேதப்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, காயத்துடன் கரைதிரும்பிய, செந்தில்குமார் உள்ளிட்ட மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையினர், தங்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 42 பேரை விடுவிக்குமாறு, கடற்படை அட்டர்னி ஜெனரலுக்கு, இலங்கை அரசு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இன்னும் ஓரிரு நாட்களில் 42 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.