வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவி வரும் நிலையில் மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 11-ஆம் தேதி வரையும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு வரும் 13-ஆம் தேதி வரையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒரிசாவுக்கு தென்கிழக்கே 560 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும் இது அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுப்பெற்று ஒரிசா மற்றும் வடக்கு ஆந்திரக் கரையை நோக்கி நகரும் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய வங்கக் கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் தெரிவித்த அவர், நாளை மற்றும் நாளை மறுநாள் 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கூறினார். அடுத்த 24 மணி நேரத்தில் உள் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்தார்.