சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை அவசர மனுவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு எதிராக நேற்று தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் எந்தவொரு மதத்தின் வழிபாட்டு முறையிலும் தலையிடக் கூடாது என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை என்பதால், இந்த தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் ஐயப்பன் கோவிலில் வழிபடலாம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இன்றைய விசாரணை நடவடிக்கைகள் தொடங்கிய போது இந்த மனுவை அவசர மனுவாக விசாரணைக்கு ஏற்கக் கோரப்பட்டது. அப்போது அவசர மனுவாக விசாரிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இந்த மனு முறைப்படி பட்டியலிடப்பட்டு அதன்படியே விசாரணைக்கு ஏற்கப்படும் என்று தெரிவித்துவிட்டனர்.