சத்துணவு திட்டத்திற்கு முட்டை விநியோகம் செய்ய டெண்டர் கோரிய 6 நிறுவனங்களையும் தமிழக அரசு நிராகரித்துள்ளது. இதையடுத்து சத்துணவு திட்டத்துக்கான முட்டை கொள்முதல் டெண்டரையும் நேற்று அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.
நாளொன்றுக்கு 60 லட்சம் முட்டைகள் என ஆண்டுக்கு 100 கோடி அளவில் தமிழக சத்துணவு திட்டத்துக்கான முட்டை சப்ளை செய்வதற்கு அரசு டெண்டர் கோரி இருந்தது. இதையடுத்து சென்னை தரமணியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் அலுவலகத்தில் டெண்டர் விடும் பணிகள் நடைபெற்றது.
இதில் வரி ஏய்ப்பு புகாருக்கு உள்ளான கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்களான, கிஷான் ,சுவர்ண பூமி , நேச்சுரல் நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் பங்கேற்றன. முன்னதாக, வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கிறிஸ்டி நிறுவனத்தில் இருந்து கணக்கு காட்டப்படாமல் இருந்த ரூ.17 கோடி பணம், 10 கிலோ தங்கம் போன்றவைகள் கைப்பற்றப்பட்டது.
மேலும் ரூ. 1,350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் முட்டை விநியோகத்திற்கு டெண்டர் கோரிய 6 நிறுவனங்களையும் தமிழக அரசு நிராகரித்துள்ளது. இதையடுத்து 6 நிறுவனங்களும் தாய், சேய் முத்திரை இல்லாமல் விண்ணப்பம் அளித்திருந்ததால், நிராகரிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.