தெலங்கானா மாநிலத்தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயத் தொழிலாளர்கள் 12 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலத்தில் நல்கொண்டா மாவட்டத்தில் பத்மாதி தண்டா கிராமத்தைச் சேர்ந்த 30 பெண்கள், அருகே உள்ள கிராமத்தில் மிளகாய் தோட்டத்துக்கு கூலி வேலைக்காக டிராக்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
வாடிப்பட்லா ((waddipatla)) கிராமத்தைக் கடந்தபோது, ஒரு வளைவில் திரும்ப முடியாமல் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்தது. டிராக்டரை நிறுத்த முயன்றபோதும், எதிர்பாராதவிதமாக அருகே இருந்த பாசன கால்வாயில் பாய்ந்தது.
இந்த விபத்தில் பெண்கள் அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். டிராக்டருடன் மூழ்கியதால், தண்ணீரிலிருந்து வெளியேற முடியாமல் 12 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த போலீசாரும் தீயணைப்புக் குழுவினரும் மீட்கும் பணிகளை மேற்கொண்டனர். டிராக்டரில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.