வடபழனி சிவன் கோவிலில் குருக்களாக இருப்பவர் பிரபு. இவரது மனைவி ஞானப்பிரியா. இளம் தம்பதிகளான இருவரும் வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளனர். முதல் தளத்தில் உள்ள இவர்களது வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த கும்பல் ஒன்று, இருவரது கை, கால்களை கயிறு மற்றும் துணியால் கட்டிப் போட்டுள்ளது.
பிரபுவை தாக்கி குளியலறையில் போட்ட அந்தக் கும்பல், ஞானப்பிரியாவை கொலை செய்து விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி, சங்கிலி ஆகியவற்றை பறித்துவிட்டு, பீரோவில் இருந்த நகைகளுடன் தப்பிச்சென்றது.
இன்று காலை வீடு திறந்து கிடப்பதைக் கண்ட உரிமையாளர் விஜயலட்சுமி, குளியலறையில் பிரபு மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது ஞானப்பிரியா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட அவர் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த வடபழனி போலீசார், ஞானப்பிரியாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கிய நிலையில் கிடந்த பிரபு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் கண் விழித்து என்ன நடந்தது என்பதைக் கூறினால் மட்டுமே விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.