கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கிபுயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் ரப்பர் விவசாயிகளுக்கு, நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில், ஒக்கி புயலால் தோட்டக்கலைப் பயிர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சுமார் ஆயிரத்து 900 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளும், ஆயிரத்து 400 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த ரப்பர் மரங்களும் சேதம் அடைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால், வாழை விவசாயிகளுக்கு மீண்டும் சாகுபடி செய்ய உதவும் வகையில், ஹெக்டேருக்கு 48 ஆயிரம் ரூபாய் முதல் 63 ஆயிரம் ரூபாய் வரை மானியமாக வழங்க உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல், வாழை, அன்னாசி உள்ளிட்ட ஊடுபயிர்களுடன் புதிதாக ரப்பர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு, ஹெக்டேருக்கு ஆகும் முழு செலவுத் தொகையான 50 ஆயிரம் ரூபாயும் மானியமாக வழங்கப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புதிய தேனீ வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், ரப்பர் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 32 ஆயிரம் ரூபாயும், தேனீக்கள் அடங்கிய 20 பெட்டிகளும் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். கிராம்புப் பயிர்களை புதிதாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 28 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மொத்தம் ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
* ஒகி புயலால் தோட்டக்கலைப் பயிர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
* சுமார் ஆயிரத்து 900 ஹெக்டேர் பரப்பில் வாழைகளும், ஆயிரத்து 400 ஹெக்டேர் பரப்பில் ரப்பர் மரங்களும் சேதம்
* வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 48 ஆயிரம் ரூபாய் முதல் 63 ஆயிரம் ரூபாய் வரை மானியம்
* புதிதாக ரப்பர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு, ஹெக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்
* புதிய தேனீ வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், ரப்பர் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 32 ஆயிரம் ரூபாயும், தேனீக்கள் அடங்கிய 20 பெட்டிகளும் வழங்கப்படும்
* கிராம்புப் பயிர்களை புதிதாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 28 ஆயிரம் ரூபாய் மானியம்
* மொத்தம் ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்