டிட்லி புயல் வலுவிழந்து மேற்குவங்கம் நோக்கி நகர்ந்துள்ள நிலையில், ஆந்திராவில் 8 பேர் உயிரிழந்தனர். கடலில் தவித்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஒடிசாவின் கோபாலபுரம் பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் டிட்லி புயல் கரையைக் கடந்தது. இதனால் ஆந்திராவின் வட பகுதிகளிலும் ஒடிசாவின் 5 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விழியநகரம் போன்ற பகுதிகளில் புயலால் பலநூறு மரங்கள் சாய்ந்தன. மின்சார கம்பங்கள், சரிந்தன. இதனால் ஏராளமான கிராமங்கள் இருளில் மூழ்கின. 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.
சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை மரங்கள் மற்றும் முந்திரி தோப்புகள் புயலால் உருக்குலைந்தன. ஆந்திராவில் வீடுகள் இடிந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். இதே போல் ஒடிசாவிலும் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. கஞ்சம் மாவட்டத்தில் வீடு ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் குடியிருந்த 6 பேரை காணவில்லை. பேரிடர் மீட்புப் படையினர் அவர்களைத் தேடி வருகின்றனர்.
புயல் வீசிய வேளையில் வங்கக் கடலில் சிக்கித் தவித்த 150 மீனவர்கள் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டனர். மேலும் பல மீனவர்களைக் காணவில்லை என்பதால் அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அதிகாரிகளுடன் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். டிட்லி புயல் வலுவிழந்த நிலையில் மேற்குவங்கம் நோக்கி நகர்ந்தது இதனால் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.