அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தமிழக கடலோர மாவட்டங்களில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாகக் கூறியுள்ளார். அதே பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கும் என கூறியுள்ளார்.

அதன் பின்னர் வரும் தினங்களில் படிப்படியாக தமிழகத்தின் இதர பகுதிகள், கேரளா, தெற்கு கர்நாடக பகுதிகளில் வட கிழக்கு பருவ மழை துவங்கும் என அறிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என அவர் கூறியுள்ளார். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இடைவெளி விட்டு சில முறை மிதமாக மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூர் மற்றும் மகாபலிபுரத்தில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *