தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிகாலையும், இரவும் தலா ஒரு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதாலும், காற்று மாசு, சுவாசக் கோளாறு ஏற்படுவதாலும், பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், தீபாவளி நாளன்று, இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் பட்டாசு வெடிக்கும் கால அளவை நீட்டிக்கக் கோரியும், பட்டாசு வெடிக்க அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை அனுமதிக்க கோரியும் தமிழக அரசு சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என திட்டவட்டமாக கூறியதுடன், எந்த 2 மணி நேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யவும் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.
அப்போது, டெல்லி மற்றும் புறநகர் பகுதியில் ஏற்கெனவே காற்று மாசு அதிகமாக இருப்பதால், சாதாரண பட்டாசுகளை அனுமதிக்க முடியாது என்றும், பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மேலும், தமிழகத்தில் அதிகாலையில் 4 மணியில் இருந்து காலை 5 மணி வரையும், இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரையும் என மொத்தம் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்ற அனுமதி வழங்கியதாகவும், இது புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் பொருந்தும் என தகவல் வெளியாகியுள்ளது.