தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், அடுத்த இரு தினங்களுக்கு மழை தமிழகத்தில் தொடருமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தூத்துக்குடியில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.
கடலூர், நெல்லிக்குப்பம்,பண்ருட்டி ஆகிய இடங்களில் விடிய விடிய கன மழை பெய்தது.
இதேபோன்று சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடருமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நல்ல மழை பெய்தது. திருவேங்கடம், குருவிகுளம், கரிவலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது. தொடர் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கன்னியாகுமரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. நாகர்கோவில், பார்வதிபுரம், இறச்சகுளம், சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.