ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரம், நம்பகத்தன்மை பேணி காக்கப்படும் என்று புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக தம்மால் முடிந்த அளவு சிறப்பாக செயலாற்ற இருப்பதாக அவர் குறிப்பிட்டார். வங்கி துறையை சீரமைக்க முதலில் கவனம் செலுத்த இருப்பதாக கூறிய அவர், இது தொடர்பாக ஆலோசிக்க நாளை காலை பொதுத்துறை வங்கிகளின் மேலாண் இயக்குனர்கள் மற்றும் தலைமை செயலதிகாரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரத்தில் வங்கிகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், வங்கிகள் எதிர்கொண்டுள்ள சவால்களை சீரமைக்க வேண்டியது அவசியமானது என்றும் தெரிவித்தார். மத்திய அரசுடனான பிரச்சனைகள் குறித்த கேள்விக்கு அனைத்து விவகாரங்களுக்கும் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும் என சக்திகாந்ததாஸ் கூறினார்.