கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
கஜா புயலால் நாகை மாவட்டத்தின் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. குடிசை வீடுகள் கடும் சேதம் அடைந்துள்ளதால், அங்கிருந்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதோடு, சாலைகள் முழுவதும் சாய்ந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேபோல், புயலின்போது சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்து, மின் விநியோகத்தை சீரமைப்பதற்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மின்வாரிய ஊழியர்களும் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொய்வை சந்தித்துள்ளது.