புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்றிய அரசாணை ரத்து

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதின்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு புகார் தொடர்பாக விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி ஆணையத்துக்கு எதிராக மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விசாரணை ஆணைய செயல்பாடுகளையும், ஆணையத்திற்கான நிதியையும் நிறுத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து விசாரணை ஆணையம் என்பதே கண் துடைப்பு நாடகம் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்,கருத்து தெரிவித்ததுடன், ஆணையம் திரட்டிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை தமிழக அரசு பரிசீலித்து குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் குற்றவியல் விசாரணை நடத்தலாம் என பரிந்துரைத்தார்.

நீதிபதி பரிந்துரையின் அடிப்படையில், புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு தொடர்பாக நீதிபதி ரகுபதி ஆணையம் விசாரித்த மற்றும் திரட்டிய ஆவணங்களின் அடிப்படையில் வழககை லஞ்ச ஒழிப்புதுறைக்கு மாற்றி கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்குகள் தொடர்ந்தனர்.

அந்த வழக்குகள் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்குப் பின்பு தீர்ப்பளித்த நீதிபதி, விசாரணை ஆணையம் முழுமையாக விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில பதவிக்காலத்தில் திரட்டப்பட் ஆவண அடிப்படையில் குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு என்றார்.

ஆவணங்களை உரிய முறையில் பரிசீலிக்காமல் அவசர கதியில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்றியுள்ளதாகவும், எனவே கடந்த செப்டம்பர் 24-ம் தேதி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *