ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், வரும் 14ஆம் தேதி சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், இதுவரை மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 130க்கும் மேற்பட்டோரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளது. இதையடுத்து, வரும் 14ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜராகுமாறு, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதை ஏற்ற அவர், 14ஆம் தேதி காலை 10 மணிக்கு, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாதது ஏன்? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்படும் என கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனை இதயவியல் நிபுணர் விஜயசந்திர ரெட்டி 17ஆம் தேதியும், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் நிக்கில் டேண்டன் மற்றும் தேவ கவுரவ் ஆகியோர் 19ஆம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள் சாமி, டிசம்பர் 20ஆம் தேதி ஆஜராக, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.