பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி அணையிலிருந்து வினாடிக்கு 4,200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டதால் 98 அடியாக குறைந்த அணையின் நீர்மட்டம், கடந்த சில நாட்களாக மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 462 கனஅடியாகவும், நீர்மட்டம் 101 புள்ளி 26 அடியாகவும் உள்ளது.
அணையில் நீர் இருப்பு 29 புள்ளி 7 டி.எம்.சி.யாக இருக்கும் நிலையில், பாதுகாப்பு கருதி கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆயிரத்து 200 கனஅடி நீரும், பவானி ஆற்றில் 2 ஆயிரம் கனஅடி நீரும் என மொத்தம் 4200 கனஅடி உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.