நாளை தமிழகத்திற்கு பிறப்பிக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்

தமிழகத்திற்கு நாளை விடுக்கப்பட்டிருந்த “ரெட் அலர்ட்” எனப்படும் வானிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுவதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை மிகமோசமான வானிலை நிலவும், அதிகன மழை பெய்யும், அது தொடர்பான பாதிப்புகளால் உயிருக்கும், உடைமைகளுக்கும் சேதம் ஏற்படக் கூடும் என்பதைக் குறிக்கும் வகையில், இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை பிறப்பித்திருந்தது. அந்த எச்சரிக்கை அறிவிப்பில், இந்திய வரைபடத்தில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுமே சிவப்பு நிறத்தால் குறித்துக் காட்டப்பட்டிருந்ததால், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தில், அதன் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை எதிர்பார்க்கப்பட்ட அதிகனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், எனவே அதுதொடர்பாக கொடுக்கப்பட்ட எச்சரிக்கை விலக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எனப்படும் வானிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுவதாகவும், பின்னர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *