கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பயீர்க்காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார். இதுதொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமையோடு நிறைவடைவதாக கூறியிருக்கிறார்.
பயிர் காப்பீடு செய்ய சிட்டா அடங்கல் சான்றிதழ் தேவைப்படும் சூழலில் அச்சான்றிதழை வழங்கக் கூடிய கிராம நிர்வாக அலுவலர்கள் கஜா புயல் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதனால் வேளாண்மை உதவி அலுவலர்கள் சிட்டா அடங்கல் சான்றிதழ்களை வழங்கலாம் என ஏற்கெனவே தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதாகவும், முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
புயலால் எந்த நேரமும் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற நிலையில் பயிர் காப்பீடு மட்டுமே விவசாயிகளுக்கு நம்பிக்கையாக இருப்பதாகவும், முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார். எனவே, பயிர்க்காப்பீட்டிற்கான காலக்கெடுவை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்க உத்தரவிடுமாறு, பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் வலியுறுத்தியிருக்கிறார்.