நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தததாக எழுந்த புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெறும் சாலைப் பணி மற்றும் சாலை சீரமைப்பு பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக, திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், முதலமைச்சரின் உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும் அவரது மனுவில் கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.