கஜா புயலால் நாகை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் 5வது நாளாக மின் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ள சுமார் 3 ஆயிரத்து 500 பேர் மின்விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
கஜா புயலின் காரணமாக, நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மரங்கள் சாய்ந்ததோடு, எண்ணற்ற மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், உயர்மின் அழுத்த கோபுரங்கள் உள்ளிட்டவை கடும் சேதம் அடைந்தன. இதனால், நாகை மாவட்டம் முழுவதும், 5வது நாளாக மின்சாரம் தடைபட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் 5 நாட்களாக மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வரும் நிலையில், நாகை நகரப் பகுதியில் மட்டுமே 50 சதவீத அளவுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், கஜா புயலால் கடும் சேதத்தை சந்தித்த வேதாரண்யம் நகர்ப்பகுதியிலும் மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்தணப்பேட்டை, ஐவநல்லூர் உள்ளிட்ட ஊர்களில் 5 நாட்களாக மின்சாரம் இல்லாமல், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தற்போது நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், சீரமைப்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வெளிமாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்து 500 பேர், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை சீரமைக்கும் பணிக்கு களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள் வேதாரண்யம் நகர்ப்பகுதியில், உதவியுடன் மின்கம்பங்களை நட்டு, மின்விநியோகத்தை சீரமைக்கும் பணியில் முதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கிராமப்பகுதிகளுக்கு மின்சாரம் கிடைக்க மேலும் சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.