தமிழகத்தில் 10 தபால் நிலையங்களில் பிரத்தியேகமாக பாஸ்போர்ட் சேவை வழங்கப்பட இருப்பதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில், இந்திய அஞ்சல் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தபால் துறை ஊழியர்களுக்கான அஞ்சல் சேவை விருதுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் பேசிய அவர், இந்திய மக்களுக்கு அஞ்சல் துறை மிகச்சிறந்த சேவை ஆற்றி வருவதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் தபால் நிலையங்கள் மூலம் நாள்தோறும் 600 பேர் வரை பாஸ்போர்ட் சேவை பெறுவதாகக் கூறிய அவர், 10 தபால் நிலையங்களில் பிரத்தியேகமாக பாஸ்போர்ட் சேவை வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆதார் தொடர்பான சேவையையும் தபால் நிலையங்கள் சிறப்பாக செய்துவருவதாகவும், நாடு முழுவதும் சுமார் 30 கோடி பேர் அஞ்சலக சேமிப்புக் கணக்கு வைத்திருப்பதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறிப்பிட்டார்.