சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யத் தொடங்கி உள்ளது. சென்னையில் நேற்று காலையிலும், மாலையிலும் மழை பெய்தது. இரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இன்று காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், தென்மேற்கு வங்க கடலை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடலின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றார். வடகிழக்கு காற்று வீசுவதாகவும், தமிழகத்தில் ஈரப்பதம் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த இரு தினங்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக பாலசந்திரன் தெரிவித்தார்