பழங்கால சிலைகள், கல்தூண்கள் பதுக்கப்பட்ட வழக்கில் கிரண் ராவ் உள்பட 12 பேர் நேரில் ஆஜராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த ரன்வீர் ஷா, கிரண் ராவ் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் பண்ணை வீடுகளில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 200-க்கும் அதிகமான சிலைகள், கல்தூண்கள் சிக்கின.
ரன்வீர் ஷா, கிரண் ராவ் ஆகியோரிடம் பணியாற்றும் ஊழியர்களான தயாநிதி, செந்தில், அஜிவ், சதீஷ், பிரகாஷ் உள்ளிட்ட 13 பேரும் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் கிரண் ராவின் நிறுவன காசாளர் நரேன் மட்டும் விசாரணைக்கு ஆஜரானார். மற்றவர்கள் தங்களை சென்னையில் விசாரிக்க வேண்டும் என விடுத்த கோரிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் நிராகரித்துவிட்டனர்.
12 பேரும் கும்பகோணத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ரன்வீர் ஷாவின் தோழி, கிரண் ராவ் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதனிடையே, முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரன்வீர்ஷா, கிரண் ராவ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சிலைகள் வாங்கியது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.