சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தால், ரத்த தானம் கொடுத்த இளைஞர் மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்று, சிகிச்சை பெற்று நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தமக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியாமல் ரத்த தானம் செய்ததாக கூறப்படுகிறது. இதை சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் முறையாக பரிசோதிக்காத நிலையில், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது.
இந்த விவகாரம் கடும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில், தமது ரத்தம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட விவகாரத்தை அறிந்த இளைஞர், எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட உறவினர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைகள் கொடுக்கப்பட்ட பிறகு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில், அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம், எலி மருந்தின் கடுமையே இளைஞர் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்தார்.