கஜா புயலால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நகராக வேதாரண்யம் அறிவிப்பு

அதிகாலை 12.30 மணி முதல் 2.30 மணிக்குள் நாகை-வேதாரண்யம் இடையே தீவிர புயலாக கரை கடந்த கஜாவின் கோர தாண்டவத்தால் மிக கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, அந்தமான் கடல் பகுதியில் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது.

இது மேலும் வலுவடைந்து கஜா புயலாக கடந்த 11-ஆம் தேதி உருவெடுத்து, பின்னர் தீவிர புயலாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்தது. இது கடலூர்-பாம்பன் இடையே நாகை அருகே புயலாக வலுக்குறைந்து வியாழக்கிழமை முற்பகலிலும், அதன் பின்னர் பிற்பகலிலும், பிறகு இரவிலும் புயலாக கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி தீவிர புயலாகவே இன்று அதிகாலை 12.30 மணிக்கு நாகை-வேதாரண்யம் இடையே, கஜா கரையைக் கடக்கத் தொடங்கியது. 2.30 மணிக்கு புயலின் கண் பகுதி கரையைக் கடந்தது. அப்போது கடல் பெரும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

புயல் கரையைக் கடந்தபோது, மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. கரைகடந்த பகுதியில் பெரும் ஊளை-பேரிரைச்சலுடன் எதிர்ப்பட்டவற்றையெல்லாம் வாரிச்சுருட்டி சென்றது கஜா. புயலின் கண்ணில் பட்ட இடங்கள் எல்லாம் சின்னாபின்னமாகின. மரங்கள், மின்கம்பங்கள் என எதுவும் கஜாவின் கோர தாண்டவத்திற்கு தப்பவில்லை.

புயலுக்கு முன்னர் வானிலையில் பெரிய மாற்றங்கள் நிகழாததால், பெரிய பாதிப்புகள் இருக்காது என்று எண்ணி, வீடுகளுக்குள் இருந்தவர்கள் கரைகடந்தபோது ஏற்பட்ட ஊழிக்காற்றால் அச்சத்தில் உறைந்தனர்.

தீவிரபுயலின் பின்பகுதியும் கரையைக் கடந்த பிறகு, கஜா புயலாக வலுக்குறைந்து அதிகாலை 5.30 மணியளவில் அதிராம்பட்டினத்திற்கு அருகே மையம் கொண்டது. அதிராம்பட்டினத்திற்கு மேற்கே 95 கிலோமீட்டர் தொலைவிலும் கொடைக்கானலுக்கு வடகிழக்கே 110 கிலோமீட்டர் தொலைவிலும் கஜா மையம் கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *