தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 50 நாட்களாக அம்மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் நேரடியாக தூத்துக்குடி சென்று மக்களுடன் மக்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பலர் ஆலையை மூடக் கோரி குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், காமெடி நடிகர் சதீஷும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.
“லண்டன்ல இருக்கும் ஒரு பிசினஸ்மேன், ஆஸ்திரேலியாவுல இருந்து தாதுப்பொருளைத் தூத்துக்குடிக்கு எடுத்துவந்து, அதை சுத்த தாமிரமா மாத்தி, கவர்மெண்டுக்கு காசும், எங்களுக்கு கேன்சரும் கொடுத்துட்டுப் போறதுக்குப் பெயர்தான் ஸ்டெர்லைட். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இருக்கிற பிரச்சினை அல்ல. இந்தியாவுக்கே அவமானம். எங்கள் நாடு என்ன குப்பைத் தொட்டியா?” என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் சதீஷ்.