அமாவாசை அன்று நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது நம் சந்ததியை நல்வழிபடுத்தும் என்பது நம்பிக்கை. அவ்வாறு தர்ப்பணம் கொடுப்பதன் மூலமாக முன்னோர்களின் ஆசிப்பெற்று நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும் என்று நம்பப்படுகிறது. மாதம் மாதம் வரும் அமாவாசையை தவிர, தை, ஆடி புரட்டாசி மாதங்களில் வரும் அம்மாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிலூம் புரட்டாசியில் வரும் ”மகாளய அமாவாசை” சிறப்பு வாய்ந்தது என சாஸ்திரம் சொல்கிறது.
மாதத்தில் ஒரு முறை வரும் அம்மாவாசை தினங்களில் முன்னோர்காளை வணங்க முடியாதவர்கள், புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்து வணங்கினாலேயே போதுமானது. இந்த மகாளய அமாவாசை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள புனித நீர் நிலைகளிலும் திருத்தலத்திலும் இன்று மக்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புனித தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்ற வண்ணம் உள்ளனர். அதிகாலையில் அக்னி தீர்த்த கரையில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். இதன் பின் கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சிவ வழிபாடு நடத்தினர்.