ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 2 மாதத்தில் இரண்டாவது முறையாக 102 அடியை எட்டியது. 105 அடி நீர்தேக்கும் அளவைக் கொண்ட பவானிசாகர் அணையில் ஆகஸ்ட் தொடங்கி அக்டோபர் வரை 102 அடிக்கு அதிகமாக நீர் தேக்கப்படுவதில்லை. கடந்த ஆகஸ்ட் இறுதியில் இந்த அணையானது 102 அடி நிரம்பியதை தொடர்ந்து உபரிநீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மீண்டும் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. நெடிக்கு 3 ஆயிரத்து 342 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் இருப்பு 30.3 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆயிரத்து 300 கனஅடி நீரும், பவானி ஆற்றில் ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.