இந்தோனேஷியாவில் ஆழிப்பேரலையில் சிக்கி 281 பேர் பலி – தேவையான உதவிகளை செய்யத் தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தோனேஷியாவில்  ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 281 ஆக அதிகரித்துள்ளது. தேவையான உதவிகளை செய்யத் தயார் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் ஜாவா, சுமத்திரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள கிரகதோ எரிமலை கடந்த சனிக்கிழமை வெடித்து சிதறி லாவா குழம்புகளை உமிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கியதில்,10 அடி உயரத்திற்கும் அதிகமாக சீறி வந்த அலைகள் குடியிருப்புகள், உணவு விடுதிகளை வாரிச் சுருட்டின.

கடற்கரையோரப் பகுதி ஒன்றில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது சுனாமி அலைகள் கபளீகரம் செய்த வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

சுனாமி தாக்கியதில் நூற்றுக்கணக்கான வீடுகளும், கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததிலும், 281 பேர் மரணமடைந்தனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 800 ஐ தாண்டியது. 28 பேரின் கதி என்னவென்றே தெரியவில்லை.

கவிழ்ந்த கார்கள், வீழ்த்தப்பட்ட மரங்கள், வீடுகளில் இருந்து அடித்து வரப்பட்ட குப்பைகளால் சாலைகள் அடைபட்டன. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புக்குழுவினர், ஆம்புலன்ஸ் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி, மாயமானவர்களை தேடும் பணி, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி ஆகியவை இந்தோனேஷிய அரசு முன் விஸ்வரூபமாக உருவெடுத்துள்ளன.

இந்த நிலையில் இந்தோனேசியாவுக்கு தேவைப்படும் உதவி செய்ய தயாராக இருப்பதாக  பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.மேலும் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரும் ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி தாக்கிய போது இந்தோனேசியால் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *